பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியபோது வார் ரூம் எப்படி இருந்தது என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டபோது, வார் ரூமில் இருந்த ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி டிகே திரிபாதி உள்ளிட்டோர், தாக்குதல் நிலவரங்களை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அல்-கய்தா பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை சுட்டு வீழ்த்தும் அமெரிக்க தாக்குதலை, அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா நேரலையில் பார்த்துக்கொண்டிருந்ததாகத் தகவல்கள் அப்போது வெளியாகியிருந்தது. அதுபோல, சிந்தூர் தாக்குதலையும், முப்படைத் தளபதிகளும் நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஏஎன்ஐ பகிர்ந்திருக்கும் இந்தப் புகைப்படங்கள் ஒன்றில் நள்ளிரவு 1.05 என்று நேரம் காட்டுகிறது. அதன்படி, ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்ட துல்லியமான நேரம் அதுவென்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு புகைப்படத்தில் ராணுவ தளபதிகள் ட்ரோன் காட்சிகள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் என ஒன்பது இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததும் பதிவாகியுள்ளது.
பல்வேறு நிலைகளிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பையும் அவர்கள் பார்வையிட்டனர்.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து வார் ரூம் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டிருப்பதன் மூலம் இந்திய பாதுகாப்புப் படையின் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதோடு, பாகிஸ்தான் மட்டுமல்ல, வேறெங்கும் பயங்கரவாதத்தை வேறோடு அழிக்க இந்தியா எப்போதும் தயாராக இருப்பதைக் கூறும் வகையில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மே 7ஆம் தேதி இரவு ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை நடத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.