திருவனந்தபுரம்: கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை!
திருவனந்தபுரத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வாகோம் பகுதியைச் சேர்ந்த அனில் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நான்கு பேர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் இவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் அனில் குமார் (55), மனைவி ஷீஜா (50), மகன்கள் அஸ்வின் (25), ஆகாஷ் (22) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தங்களது குடும்பம் பெரும் கடன் சுமையில் சிக்கியிருப்பதாக ஷீஜா உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ஒரு பழைய வீட்டை புதுப்பிப்பதற்காக, தேசிய வங்கியிலிருந்து ஒரு பெரிய தொகையை கடனாக வாங்கிய பிறகுதான் அவர்களுக்கு கடன் தொல்லை ஆரம்பித்துள்ளது.
இது குறித்து அவர்களது குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், 2019ஆம் ஆண்டு அஸ்வின் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து 6 மாதங்கள் மருத்துவமனையில் இருந்தால், இதற்காக அவரது குடும்பம் பல லட்சம் செலவிட்டது. இதுதான் அவர்களது குடும்பத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியது என்கிறார்கள்.
திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு அவர்களை அக்கம் பக்கத்தினர் கடைசியாகப் பார்த்திருக்கிறார்கள். செவ்வாய்க்கிழமை காலை வீடு திறக்காமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, நான்கு பேரும் வீட்டு ஹாலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].