தில்லியில் கார் வெடித்து விபத்து: 10 பேர் பலி, பலர் காயம்
தில்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்துச் சிதறிய விபத்தில் இதுவரை 10 பேர் பலியானதாகத் தகவல்.
தில்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்துச் சிதறிய விபத்தில் இதுவரை 10 பேர் பலியானதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், 24 படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள எல்.என்.ஜே.பி. மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார் வெடித்துச் சிதறிய மெட்ரோ இடத்தின் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ, கார்கள் உள்ளிட்ட பிற வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், தீ விபத்து நடந்த இடத்திற்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.
மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட சிஆர்பிஎஃப் டிஐஜி கிஷோர் பிரசாத், தற்போது விபத்து குறித்து எதையும் கூற இயலாது. தற்போது விபத்து நடந்த இடத்தை மட்டுமே பார்வையிட்டுள்ளோம். முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு தகவல்கள் தெரிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | தில்லி செங்கோட்டை அருகே வெடித்த கார்: விபத்தா? சதிச்செயலா?