ராகுல் வெளியிட்ட வாக்குத் திருட்டு! சட்டப் பாதுகாப்பு தேடும் பிரேசில் மாடல்!
ராகுல் வெளியிட்ட வாக்குத் திருட்டு விவகாரத்தில் வெளியிடப்பட்டபிரேசில் மாடல் பெண் சட்டப் பாதுகாப்பு தேடி வருகிறார்.
ஹரியாணா வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த தன்னுடைய புகைப்படம் உள்ளிட்டவற்றை தடை செய்ய சட்ட ரீதியாக உதவி கோரி வருகிறார் பிரேசில் மாடல் அழகி லாரிஸா நேரி.
லாரிஸா நேரி, பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி. இவரது புகைப்படம் ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பல முறை இடம்பிடித்திருந்த விவகாரத்தை வெளிப்படுத்தியிருந்தார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.
இவரது புகைப்படங்கள் பல்வேறு பெயர்களில் ஹரியாணா வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்திருந்தது. இது அவரது சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்வை பெரிதும் பாதிக்குமோ என்று கவலை அடைந்திருக்கிறார் நேரி.
இதையடுத்தே, நேரியின் புகைப்படங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட தகவல்களை வேறு யாரும் பயன்படுத்தாமல் தடுக்கும் வகையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் பணிகளை துரிதப்படுத்தியிருக்கிறார்கள் அவரது வழக்குரைஞர்கள்.
அண்மையில், செய்தியாளர் சந்திப்பின்போது, ராகுல் காந்தி, ஹரியாணா வாக்காளர் பட்டியலில் நேரியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி என்ற பெயர்களில் 22 வாக்காளர்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களித்திருப்பதை வெளிப்படுத்தியிருந்தார்.
இது குறித்து அறிந்த நேரி, இந்திய அரசியலில் நான் எதையும் செய்யவில்லை. பங்குச் சந்தை இணையதளத்திலிருந்து என்னுடைய புகைப்படம் எடுக்கப்பட்டு என்னுடைய அனுமதியின்றி வாக்காளர் பட்டியலில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
வெளி உலகம் அதிகம் அறியப்படாத நேரியை சமூக வலைத்தளப் பக்கத்தில் 2000 பேர் மட்டுமே பின்தொடர்ந்திருந்தனர். ஆனால் இந்த விடியோ வெளியான பிறகு அவரைப் பின்தொடர்பவர்கள் 8000 பேராக அதிகரித்துள்ளனர். இது தற்போது மேலும் அதிகரித்திருக்கக் கூடும். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.
இந்த தகவல் வெளியான பிறகு, இவர் தொடர்பாக ஏராளமான மீம்களும் வெளியாகி வருகின்றன. ஆனால், இந்த திடீர் பிரபலம், நேரிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. இதுபோன்ற ஒரு திடீர் வைரல், அவரது மாடலிங் தொழிலுக்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்துமோ என்று அச்சத்தில் உள்ளார்.
என்னை அதிகம் இந்த விஷயம் பாதித்துவிட்டது. சைபர் குற்றப் பிரிவு அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசியிருக்கிறேன். ஒருவரது அனுமதியில்லாமல் அவரது புகைப்படம் பயன்படுத்தப்படுவது தனி மனித உரிமை மீறல். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார் நேரி.