ஒரேயொரு வேட்பாளர் வெற்றி! ‘பிகாரில் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை’ -மாயாவதி
பிகார் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றிருந்தால் அதிக இடங்களில் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும் - மாயாவதி
பிகாரில் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி(பி.எஸ்.பி.) தலைவர் மாயாவதி விமர்சித்திருக்கிறார்.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு நடைபெற்ற தோ்தல் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அதில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இந்தத் தேர்தலில் ராம்கர் பேரவை தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சதீஷ் குமார் சிங் யாதவ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அசோக் குமார் சிங்கைவிட வெறும் 30 வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வெற்றி பெற்ற பி.எஸ்.பி. வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்து உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘அரசு நிர்வாகமும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பி.எஸ்.பி. வேட்பாளரை தோற்கடிக்க, மறுவாக்கு எண்ணிக்கை நடத்த முற்பட்ட போதிலும், துணிச்சலான நமது கட்சித் தொண்டர்கள் இந்தச் சதியை முறியடித்து சாதித்துள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘பிகாரின் பிற இடங்களிலும், பி.எஸ்.பி.யை எதிர்த்துப் போட்டியிட்ட பிற வேட்பாளர்களுக்கு நமது கட்சி வேட்பாளர்கள் கடும் போட்டியளித்திருப்பதை தேர்தலுக்குப் பிந்தைய தரவுகள் மூலம் அறிய முடிகிறது.
ஒருவேளை தேர்தல் நியாயமாக நடைபெற்றிருந்தால், இன்னும் பல இடங்களில் பி.எஸ்.பி. உறுதியாக வெற்றி பெற்றிருக்கக்கூடும். ஆனால், அது நடைபெறாமல் போய்விட்டது’ என்றார்.
இத்தேர்தலில் வாக்குத் திருட்டு மிகப் பெரியளவில் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. தேர்தல் தோல்வி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிடும்போது, “ஆரம்பக்கட்டத்திலிருந்தே நியாயமாக நடைபெறாத இத்தகைய தேர்தலில் நாம் வெற்றியடைவது இயலாத காரியமாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.
BSP chief Mayawati on Sunday claimed that her party would have won many more seats in the Bihar assembly elections if the polls had been completely free and fair.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.