தந்தைக்கு சிறுநீரகம் கொடுத்தது தவறா? லாலு பிரசாத் மகள் ரோஹிணி உருக்கம்
குடும்பத்திலிருந்து பிரிந்து செல்லும் வகையில் அவதூறு சொற்களைப் பேசியதாகவும், அடிக்க முயன்றதாகவும் தனது சகோதரர்கள் மீது ரோஹிணி குற்றச்சாட்டு.
தன்னைப்போன்ற ஒருவர் எந்தவொரு குடும்பத்திலும் பிறக்கக் கூடாது என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
குடும்பத்திலிருந்து பிரிந்து செல்லும் வகையில் அவதூறு சொற்களைப் பேசியதாகவும், அடிக்க முயன்றதாகவும் தனது சகோதரர்கள் மீது ரோஹிணி குற்றம் சாட்டியுள்ளார்.
நடந்து முடிந்த பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தோல்வியடைந்த நிலையில் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத்தின் மகள் ரோஹிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாகவும் குடும்பத்திலிருந்து பிரிவதாகவும் அறிவித்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், குடும்பத்திலிருந்து விலகிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டதாகவும், இதற்காக பல அவமானங்களை சந்தித்ததாகவும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ரோஹிணி பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ரோஹிணி பதிவிட்டுள்ளதாவது,
''நேற்று, ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு திருமணமான பெண், ஒரு தாய் அவமானப்படுத்தப்பட்டார். மோசமான சொற்களால் வஞ்சிக்கப்பட்டார். அவளை அடிக்க அறைந்தனர். நான் என் சுயமரியாதையை சமரசம் செய்துகொள்ளவில்லை. உண்மையை விட்டுக்கொடுக்கவில்லை. இதன் காரணமாகவே நான் அவமானத்தைத் தாங்க வேண்டியிருந்தது.
நேற்று, ஒரு மகள் அழுதுகொண்டே பெற்றோரையும் சகோதரிகளையும் விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் என் தாய் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் அநாதையாக மாற்றப்பட்டேன்.
நீங்கள் அனைவரும் என் வழியைப் பின்பற்றக்கூடாது. எந்த வீட்டிற்கும் ரோஹிணியைப் போன்ற ஒரு மகள் அல்லது சகோதரி இருக்கக்கூடாது'' எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், கோடிக்கணக்கில் செலவழித்து தனது சிறுநீரகத்தைக் கொடுத்து தந்தைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவியதாகவும், தந்தை முக்கியம் எனக் கருதியதால், இதனை தனது புகுந்த வீட்டிற்குக் கூடச் சொல்லவில்லை எனவும் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில், ''திருமணமான அனைத்து மகள்கள் மற்றும் சகோதரிகளிடமும் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். நீங்கள் பிறந்த வீட்டில் ஒரு சகோதரர் இருக்கும்போது, தவறுதலாக கூட உங்கள் கடவுள்போல நினைக்கும் தந்தையை காப்பாற்றாதீர்கள்.
அந்த வீட்டின் மகனை, அவரது ஹரியாணா நண்பரின் சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்யச் சொல்லுங்கள். அனைத்து சகோதரிகளும் மகள்களும் தங்கள் வீட்டையும் குடும்பத்தையும், அவர்களின் குழந்தைகளையும், அவர்களின் வேலையையும், அவர்களின் மாமியாரையும், பெற்றோரை கவனிக்காமல், தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்.
நான் ஒரு பெரிய குற்றத்தைச் செய்தேன், சிறுநீரகத்தைக் கொடுக்க முன்வந்தபோது, நான் என் கணவரிடமோ அல்லது என் மாமியாரிடமோ அனுமதி பெறவில்லை.
நான் கடவுளைப்போல நினைக்கும் என் அப்பாவைக் காக்க நான் அவ்வாறு செய்தேன், இன்று அந்தக் குடும்பத்தாலேயே அழுக்கானவளாக அறிவிக்கப்பட்டுள்ளேன். நீங்கள் ஒருபோதும் என்னைப் போல ஒரு தவறைச் செய்யக்கூடாது. ரோஹிணியைப் போல ஒரு மகள் யாருக்கும் இருக்கக்கூடாது'' என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங். தலைவர் பாஜகவில் ஐக்கியம்!
RJD Lalu prasad Yadav Rohini Acharya post about kidney trasplant
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.