தில்லி கார் வெடிப்பு: அமீரைத் தொடர்ந்து 2 வது நபர் கைது!
தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் 2 வது நபர் கைது செய்யப்பட்டது குறித்து...
தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொழில்நுட்ப ரீதியாக உதவியதாக காஷ்மீரைச் சேர்ந்த மற்றொரு நபரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று (நவ. 17) கைது செய்தனர்.
வெடிகுண்டு வைத்து விபத்துக்குள்ளான காரை வாங்கிக்கொடுத்து அதனை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் உன் நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஏற்கெனவே அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்த நிலையில், இன்று இரண்டாவது நபரை கைது செய்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் வைத்து கைது செய்யப்பட்ட காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த ஜசிர் பிலால் வானி என்பவர் தொழில்நுட்ப ரீதியாக தில்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு உதவியுள்ளது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பயங்கரவாத சதித்திட்டங்களுக்கு உதவும் வகையில் ட்ரோன்களை சரிபார்த்தல், ராக்கெட்டுகளை வடிவமைத்தல் போன்ற பணிகளையும் ஜசிர் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாக மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவரும் என்ஐஏ, விசாரணைகளின் அடிப்படையில் இச்சம்பவத்தை தற்கொலைப் படை தாக்குதல் என உறுதி செய்துள்ளது.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே கடந்த 10 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் கடும் நெரிசலுக்கு மத்தியில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அருகில் இருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. இச்சம்பவத்தில் 15 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார் வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஹுண்டாய் ஐ20, ஜம்மு-காஷ்மீரின் சம்பூரா பகுதியைச் சோ்ந்த அமீா் ரஷீத் அலி என்பவரின் பெயரில் பதிவாகியிருந்தது. மேலும் உமருக்கு நெருங்கிய தொடர்பில் அவர் இருந்துள்ளதால், அவரைக் கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகளுக்கு பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | மரண தண்டனை: தீர்ப்பு ஒருதலைபட்சமானது; அரசியல் நோக்கம் கொண்டது! - ஷேக் ஹசீனா