பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ
பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து பிகார் முதல்வர் ஆசீர்வாதம் பெற முயன்றது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆசீர்வாதம் பெற முயன்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிகாரில், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவரான நிதிஷ் குமார், இன்று (நவ. 20) 10 ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இதையடுத்து, நிதீஷ் குமாரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி பிகார் சென்றிருந்தார்.
இந்த நிலையில், விழா முடிவடைந்த பின்பு அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று மாலை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மோடியை நேரில் வந்து வழியனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் கைகளை இறுகப் பிடித்திருந்த நிதீஷ் குமார் திடீரென அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற முயன்றார். இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும், முதல்வர் நிதீஷ் குமார் பிரதமர் மோடியை விட சில மாதங்கள் மட்டுமே வயதில் சிறியவர் என்பதால், அவரது இந்தச் செயலை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சித்து வருகின்றனர்.
முன்னதாக, பிகாரில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் பிரசாரப் பேரணியில் பிரதமர் மோடியின் காலில் விழுந்து நிதீஷ் குமார் ஆசீர்வாதம் பெற முயன்றது பெரிதும் விமர்சிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிக்க: “மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!