துபை விமான கண்காட்சியில் பலியான விமானியின் கடைசி விடியோ
துபை விமான கண்காட்சியில் பலியான விமானியின் கடைசி விடியோ காட்சிகள்
துபை விமான கண்காட்சியில் வான் சாகத்தின் போது இந்திய தேஜஸ் போா் விமானம் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கி, அதிலிருந்த விமானி விங் கமாண்டா் நமான்ஷ் சாயல் உயிரிழந்த நிலையில், அவரது கடைசி விடியோ வெளியாகியிருக்கிறது.
அவரது வீர மரணத்துக்கு இந்திய விமானப் படை தன்னுடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. சற்றும் தளராத அர்ப்பணிப்பு, எங்குமே காணப்படாத திறமை, குறையாத கடமை உணர்வு போன்றவற்றுடன் நாட்டுக்காக பணியாற்றியவர் என்றும் அவருக்கு புகழாரம் சூட்டியிருக்கிறது.
இதற்கிடையே, துபை விமான கண்காட்சியில் தேஜஸ் விமானத்தை இயக்குவதற்கு முன்பு, அவர் இடம்பெற்ற விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேஜர் சுரேந்திர பூனியா என்பவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அந்த விடியோவில், விமான கண்காட்சியில் நிறுத்தப்பட்டிருந்த தேஜஸ் விமானத்தை இயக்கச் சென்று கொண்டிருக்கும் விமானி நமான்ஷ் சாயல் புன்னகைத்தபடி செல்வது பதிவாகியிருக்கிறது-
ஆனால், அந்த விடியோவே, அவரது கடைசி விடியோவாகவும், அவர் இயக்கிய அந்த விமானமே கடைசி பயணமாகவும் இருக்கும் என்று யாரும் அந்த நேரத்தில் நினைத்திருக்க வாய்ப்பில்லை. வாழ்க்கை முன் கணிக்க முடியாதது என்று கூறி, இந்த விடியோ பகிரப்பட்டுள்ளது.
இந்த விடியோவைப் பார்த்த பலரும் தங்களது சோகத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
நமான்ஷ் சாயல், ஹிமாசல பிரதேசத்தின் பட்டியால்கா் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மனைவி, 7 வயது மகள் மற்றும் பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
நமான்ஷின் மனைவியும் விமானப்படையில் பணிபுரிகிறாா். பதான்கோட் விமானப்படைத் தளத்தில் பணியமா்த்தப்பட்டபோது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, 2014-இல் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா் என்று சாயலின் உறவினர் தெரிவித்துள்ளார்.
தேஜஸ் போர் விமானம், வெள்ளிக்கிழமை துபையில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது எதிர்பாராத வகையில் தரையில் விழுந்து பற்றி எரிந்தது. இதில் விமானி நமான்ஷி சாயல் வீரமரணம் அடைந்தார்.