விமானப் படை விமானம் மூலம் இலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்!
இலங்கைக்கு விமானப் படை விமானம் மூலம் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக கடுந்துயரத்துக்கு உள்ளாகியிருக்கும் இலங்கைக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை இந்திய விமானப் படை விமானம் இன்று காலை கொண்டு சேர்த்துள்ளது.
சி130 ரக விமானம், மக்களுக்குத் தேவையான அடிப்படை உணவு உள்ளிட்ட பொருள்கள், கொழும்புவின் பண்டரநாயக்கே சர்வதேச விமான நிலையத்துக்கு அதிகாலை 1.30 மணிக்குக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப் படை அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள், நிவாரணப் பொருள்களைப் பெற்றுக் கொண்டனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, இலங்கையில் கனமழை பெய்து, அதனால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 69 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வந்த 34 பேரின் கதி என்ன என்று இதுவரை தெரியவரவில்லை.
இந்த பேரிடரில், 61 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக பல இடங்கள் தொடர்புகொள்ள முடியாத வகையில் துண்டிக்கப்பட்டுள்ளன.
கண்டி பகுதியில் மட்டும், மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.