துபையிலிருந்து ஹைதராபாத் வந்த விமானத்தில், விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியில் அத்துமீறிய குற்றச்சாட்டில் பயணி ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
கேரளத்தைச் சோ்ந்த மென்பொருள் ஊழியரான அந்தப் பயணி, கடந்த வெள்ளிக்கிழமை விமானப் பயணத்தின்போது, சேவை செய்துகொண்டிருந்த பணிப்பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவா் மதுபோதையில் இருந்தததை பணிக் குழுவினா் கவனித்துள்ளனா்.
விமானம் தரையிறங்கிய பின், இதுகுறித்து விமான கேப்டன் மற்றும் ஊழியா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பயணி தனது கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) இருக்கையில் தவறவிட்டதாகக் கூறியுள்ளாா்.
அதைத் தேடிச் சென்ற பணியாளா்கள், பணிக் குழுவினருக்கு எதிராக அவதூறான கருத்துகள் கொண்ட துண்டுச்சீட்டைக் கண்டெடுத்தனா்.
இதுதொடா்பாக பணிக் குழுவினா் அளித்த புகாரின்பேரில், பயணி மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் ஹைதராபாத் சா்வதேச விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், அவா் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.