பாடகர் ஸுபீன் கர்க் விஷம் கொடுத்து கொலை? விரைவில் உண்மை அம்பலமாகும்: அஸ்ஸாம் முதல்வர்
பாடகர் ஸுபீன் கர்க் விஷம் கொடுத்து கொலை? அஸ்ஸாம் முதல்வர் நிராகரிப்பு!
பாடகர் ஸுபீன் கர்க் விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா? என்பது விரைவில் வெளியாக உள்ள தடயவியல் பரிசோதனை முடிவுகளில் தெரிய வரும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு இந்திய கலாசார விழாவில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றிருந்த ஸுபீன் கர்க் அங்கு கடலில் குளிக்கும்போது உயிரிழந்தார். செப். 19-இல் வெளியான ஸுபீன் கர்க்கின் மரணச் செய்தி, உலகெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான அவரது ரசிகர்களை மீளாத் துயரத்திலும் அதிர்ச்சியிலும் திணறச் செய்துள்ளது.
இந்த நிலையில், அவரது மரணம் திட்டமிட்ட கொலை என்ற சந்தேகம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து, சிங்கப்பூருக்கு அவரை அழைத்துச் சென்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் ஸுபீன் கர்க்கின் மேலாளருமான சித்தார்த் சர்மா மற்றும் ஸ்பீன் கர்க்கின் இசைக் குழுவைச் சேர்ந்த இருவர்- ஷேகர் ஜோதி கோஸ்வாமி, அம்ரித்பிரபா மஹாந்தா ஆகியோர் கைது செய்ய்ப்பட்டு 14 நாள் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஸுபீன் கர்க்கை விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக ஷேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து, அஸ்ஸாம் முதல்வர் பேசுகையில், “ஸுபீன் கர்க்கின் உடலிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் பரிசோதனை அறிக்கை அக். 10-இல் கிடைத்துவிடும். அதன்பின், அக். 11-இல் முழு விவரமும் அறிந்து கொள்ளலாம்.
குற்றப் பதிவேட்டில் அனைத்து தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலத்தையும் பதிவு செய்ய வேண்டியது காவல் துறையின் கடமை. அதில் சிலர் நேர்மறையாகவும், சிலர் எதிர்மறையான கருத்துகளையும் தெரிவிப்பார்கள். இவையனைத்தும் காவல் துறையின் கூற்றுகள் அல்ல. சாட்சியங்கள் சொல்லும் விஷயங்கள்.
ஸுபீன் கர்க்குக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் காவல் துறையால் வெளியிடப்பட்ட அறிக்கை அல்ல. அதுவுமொரு சாட்சியத்தின் வாக்குமூலம். குற்றம்சாட்டப்பட்ட நபர் சொன்ன அந்த தகவல் பொய்யாகக்கூட இருக்கலாம். அவர் தன்னை பாதுகாத்துக்கொள்ள அப்படிச் சொன்னாரா என்று தெரியவில்லை. இவையனைத்தும் விசாரணையில் தெரிய வரும்” என்றார்.
Zubeen Garg death probe: The viscera examination report of Zubeen Garg will be available on October 10, and we will know the details by October 11 - Assam CM
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.