மே.வங்கத்தில் மழை பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற பாஜக எம்பி, எம்எல்ஏ மீது தாக்குதல்!
பாஜகவைச் சேர்ந்த எம்.பி. காகென் முர்மு மற்றும் எம்எல்ஏ சங்கர் கோஷ் ஆகிய இருவர் மீது தாக்குதல்!
கனமழை, நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற பாஜக எம்.பி., எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில், சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 28 பேர் பலியாகினர். பலர் காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வடக்கு வங்கத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க பாஜகவைச் சேர்ந்த எம்.பி. காகென் முர்மு மற்றும் எம்எல்ஏ சங்கர் கோஷ் ஆகிய இருவரும் இன்று(அக். 6) சென்றனர். அப்போது அவர்களை ஒரு கும்பல் தாக்கி காயப்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தின் நாக்ரகட்டா பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நல்வாய்ப்பாக சிறிய அளவிலான காயங்களுடன் தப்பித்த அவர்கள் சம்பவ இடத்திலிருந்து வெளியேறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக பாதிக்கப்பட்ட இரு தலைவர்களும் தெரிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி, மேற்கு வங்க ஆளுநர் மற்றும் பிற பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.