சட்டப்பிரிவு 370 விவகாரம்: கண்டனம் தெரிவித்து ராஜிநாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி காங்கிரஸில் ஐக்கியம்!
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்...
ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஐஏஎஸ் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார்.
புது தில்லியில் திங்கள்கிழமை(அக். 13) நடைபெற்ற நிகழ்சியில் அவர் கங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் முன்னிலையில் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2019-இல் ஐஏஎஸ் பதவியை ராஜிநாமா செய்தவர் கண்ணன் கோபிநாதன். இந்த நிலையில், பாஜக அரசுக்கு எதிரான காங்கிரஸுடன் ஒத்தக்கருத்துடைய கண்ணன் கோபிநாதன் தன்னை இன்று அக்கட்சி உறுப்பினராக்கிக் கொண்டார்.
காங்கிரஸில் இணைந்தது குறித்து கருத்து பதிவிட்டுள்ள கண்ணன் கோபிநாதன், ‘ஐஏஎஸ்-இல் இணைவதே சேவையாற்றுவதற்கான ஒரு மார்க்கமாக எனக்கு இருந்தது. பேச்சுரிமைக்காக அதனை விட்டு வருவதும் அவசியமாகிறது.
காங்கிரஸ் மூலம், என்னால் இரண்டையும் செய்ய முடியும்; அதற்கான இடம் கிடைக்கும் - ஒன்று, மக்களுக்கான சேவை, இன்னொன்று - அநீதிக்கு எதிரான என் குரல் ஒலிப்பது’ என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.