குடிமைப் பணிகள் தேர்வின் விடைக்குறிப்பை வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எடுத்துள்ள முடிவுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை திருப்தி தெரிவித்தது.
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டங்களாக குடிமைப் பணிகள் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வின் நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்த பிறகே தேர்வு மதிப்பெண்கள், கட்-ஆப் மதிப்பெண்கள், விடைக்குறிப்புகளை யுபிஎஸ்சி வெளியிடுவது வழக்கம். இந்த நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேர்வர்கள் சிலர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் யுபிஎஸ்சி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், "குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகே இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும். அதேவேளையில், முதல்நிலை தேர்வு நடத்தப்பட்ட பின்னர், உத்தேச விடைக்குறிப்பை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
விரிவான ஆலோசனையின் விளைவாகவும், அரசியல் சாசன அமைப்பாக யுபிஎஸ்சிக்கு வழங்கப்பட்டுள்ள பணியைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஏ.எஸ்.சாந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது யுபிஎஸ்சியின் முடிவுக்கு நீதிபதிகள் அமர்வு திருப்தி தெரிவித்து, வழக்கை முடித்துவைத்தது.
இனி இந்த விவகாரத்தில் உகந்த நிவாரணம் பெற மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.