தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
காற்றின் தரம் மோசமடைந்ததால், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தில்லி மற்றும் என்.சி.ஆா். பட்டாசு வெடிக்கவும், உற்பத்தி, விற்பனை, இருப்பு வைக்கவும் உச்சநீதி மன்றம் தடை விதித்தது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க அனுமதி கோரி தில்லி மற்றும் அண்டை மாநில அரசுகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு கடந்த மாதம் அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, அக்டோபர் 18 முதல் 21 வரை தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து இன்று உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக, கடந்த 6 ஆண்டுகளாக பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், கரோனா காலத்தை தவிர, மற்ற ஆண்டுகளில் காற்றின் தரம் மேம்படவில்லை. பட்டாசுக்கு தடை விதிப்பதால், தரமில்லாத பட்டாசுகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இது மேலும் சேதத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 6 ஆண்டுகளில் பசுமை பட்டாசுகள் உமிழ்வை கணிசமாகக் குறைத்துள்ளன.” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
”அக்டோபர் 18 முதல் அக்டோபர் 21 வரை பசுமை பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்கப்படும். க்யூஆர் குறியீடுகளுடன் அனுமதிக்கப்பட்ட பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க காவல்துறை ரோந்து குழுவை அமைக்க வேண்டும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். ஆன்லைன் வலைதளங்களில் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.