குஜராத்தில் தொடரும் கனமழை! உயர் எச்சரிக்கையில் 113 அணைகள்!
குஜராத்தில் சுமார் 80 அணைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன...
குஜராத் மாநிலத்தில், சுமார் 92.64 சதவிகிதம் பருவமழை பொழிவானது பதிவாகியுள்ள நிலையில், 113 அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வட மாநிலங்களின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் பருவமழை தொடங்கியது முதல், இன்று (செப்.4) வரை 92.64 சதவிகிதம் மழை பெய்துள்ளது பதிவாகியிருப்பதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதில், அதிகப்படியாக வடக்கு குஜராத்தில் 96.94 சதவிகிதம் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, தெற்கு குஜராத்தில் 96.91 சதவிகிதம், கிழக்கு - மத்திய குஜராத்தில் 93.79 சதவிகிதம், கட்ச் மாவட்டத்தில் 85.14 சதவிகிதம் மற்றும் சௌராஷ்டிராவில் 84.74 சதவிகிதம் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் உள்ள மொத்தம் 206 அணைகளில், 113 அணைகளுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், 82 அணைகள் 100 சதவிகிதமும், 68 அணைகள் 70 - 100 சதவிகிதமும் நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், குஜராத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் சர்தார் சரோவார் அணையானது அதன் முழுக் கொள்ளளவில் 89 சதவிகிதத்துக்கும் அதிகமாக நிரம்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த சில நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வரும் செப்.4 முதல் செப்.7 ஆம் தேதி வரை குஜராத் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!