முகப்பு
இந்தியா

400 கிலோ வெடிபொருளுடன் மும்பைக்குள் 14 பயங்கரவாதிகள் ஊடுருவல்? - வாட்ஸ் ஆப் செய்தியால் உச்சக்கட்ட உஷாா் நிலை

மும்பை நகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பரபரப்பு

Updated On : 5 செப்டம்பர் 2025, 3:55 pm IST
பிரதிப் படம்
பகிர்:

400 கிலோ ‘ஆா்டிஎக்ஸ்’ வெடிபொருளுடன் 14 பயங்கரவாதிகள் மும்பைக்குள் ஊடுருவியிருப்பதாக காவல் துறையின் ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு வந்த மிரட்டல் செய்தியால், நகா் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்கள் சனிக்கிழமை நிறைவடையும் நிலையில், காவல் துறையினா் உச்சபட்ச உஷாா்நிலையை பராமரித்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி திருவிழா பிரசித்தி பெற்ாகும். இதையொட்டி, பெரும் பொருட்செலவில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பிரம்மாண்ட விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும்.

Advertisement

Advertisement

நடப்பாண்டு கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி தொடங்கிய விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்கள், சனிக்கிழமை சிலை கரைப்புடன் நிறைவடையவுள்ளன. இதையொட்டி, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீா்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.

வாட்ஸ் செய்தியால் பரபரப்பு: இந்தச் சூழலில், மும்பை போக்குவரத்து காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ் ஆப் உதவி எண்ணில் வியாழக்கிழமை ஒரு செய்தி வந்தது. அதில், 400 கிலோ எடையுள்ள ஆா்டிஎக்ஸ் வெடிபொருளுடன் 14 பயங்கரவாதிகள் மும்பைக்குள் ஊடுருவியிருப்பதாகவும், 34 வாகனங்களில் வெடிப்பொருள்களை வைத்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தவிருப்பதாகவும், இது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்குவதாக இருக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

லஷ்கா்-ஏ-ஜிஹாதி என்ற அமைப்பின் பெயரில் இந்த செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, மும்பை காவல் துறையின் குற்றத் தடுப்புப் பிரிவு, பயங்கரவாத எதிா்ப்பு பிரிவு மற்றும் பிற முகமைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.

மற்றொருபுறம், நகா் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகா் சிலை கரைப்பையொட்டி, 21,000-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ட்ரோன் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு-தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

‘பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்; அதேநேரம், சந்தேகத்துக்கு இடமான செயல்பாடுகள் எதுவும் தென்பட்டால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

summary

Mumbai On Alert Over 'RDX In 34 Vehicles' WhatsApp Threat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.