45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!
தில்லியில் நடந்த விழாவில் 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
ஆசிரியராகப் பணியாற்றி குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரை கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான செப்.5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாளில் கல்வியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது.
அந்தவகையில், தமிழகத்தில் இருவர், புதுச்சேரியில் ஒருவர் உள்பட நாடு முழுவதிலும் 45 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தாண்டு கல்வியில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.
தமிழகத்தில், சென்னை, மயிலாப்பூரில் உள்ள, பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பாரதியார் நுாற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.