ஆதாரை 12-வது ஆவணமாக ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஆதார் அட்டை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பற்றி...
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மால்யா அமர்வு முன்பாக இன்று(திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "பிகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு ஆதார் அட்டையை 12 ஆவது ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்படி வாக்காளர்கள், ஆதார் அட்டையை ஒரு அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். எனினும் ஆதார் அட்டையின் நம்பகத் தன்மை மற்றும் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.
ஆதார், சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும் குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 23(4)-ன்படி ஆதார் ஒரு அடையாளச் சான்று. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, பிற 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்வது குறித்து தேர்தல் ஆணையம், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
ஆதார் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
Supreme Court Directs ECI To Accept Aadhaar Card As 12th Document
இதையும் படிக்க | தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!