46 நாடுகளுக்குச் சென்றவருக்கு மணிப்பூர் வர நேரமில்லை: பிரதமர் பயணம் குறித்து கார்கே
46 நாடுகளுக்குச் சென்றவருக்கு மணிப்பூர் வர நேரமில்லை என்று பிரதமர் பயணம் குறித்து கார்கே கண்டனம்.
பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் பயணம் என்பது ஒரு மோசடி நாடகம். வன்முறையால் காயம்பட்ட மக்களுக்கு இது மிகப்பெரிய அவமானம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று மிசோரம், மணிப்பூர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 5 மாநிலங்களுக்கு பயணம் தொடங்கியிருக்கிறார். மிசோரத்தில் பயணத்தை முடித்துக் கொண்டு மணிப்பூர் சென்றுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய கடுமையான விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், மணிப்பூரில் உங்கள் 3 மணி நேர நிறுத்தம் மக்கள் மீதான கருணை அல்ல - இது கேலிக்கூத்து, அடையாளவாதம் மற்றும் காயமடைந்த மக்களுக்கு மிகப் பெரிய அவமானம்.
மணிப்பூருக்கு வரும் மோடி இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சாலைவலம் செல்வதாகக் கூறுவதெல்லாம், ஒன்றுமில்லை, நிவாரண முகாம்களில் இருந்து மணிப்பூர் மக்களின் அழுகுரலைக் கேட்காமல் கோழைத்தனமாகத் தப்பிப்பதே.
684 நாள்களாக வன்முறை.. 300 உயிர்கள் பலி, 67 ஆயிரம் பேர் இடம்பெயர்வு, 1500க்கும் மேற்பட்டோர் காயம்.
இதுவரை 46 வெளிநாட்டுப் பயணங்களை நீங்கள் மேற்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் சொந்த நாட்டின் குடிமக்களை சந்தித்து, உங்களது அனுதாபத்தை ஓரிரு வார்த்தைகளால் தெரிவிக்க நேரமில்லை.
நீங்கள் கடைசியாக மணிப்பூர் எப்போது வந்தீர்கள்? ஜனவரி 2022 - தேர்தலுக்காக!
உங்களது இரட்டை என்ஜின் அரசு, மணிப்பூரில், அப்பாவி மக்களின் வாழ்க்கையை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டது.
மணிப்பூரில் இன்னமும் வன்முறை நீடிக்கிறது.
மறக்க வேண்டாம், நாட்டின் பாதுகாப்புக்கும், எல்லைக் கண்காணிப்புக்கும் உங்கள் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
உங்கள் இந்த சில நிமிட நிறுத்தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் உங்களுக்கு குற்ற உணர்வும் ஏற்படவில்லை.
உங்களை வரவேற்க நீங்களே சிறப்பான ஏற்பாடுகளை செய்துகொள்கிறீர்கள். இது, மணிப்பூரில் காயம்பட்ட மக்களின் காயத்தில் மீண்டும் தாக்குவது போல ஆகிறது.
நீங்கள் சொல்வீர்களே, அதில் உங்கள் ராஜ தர்மம் எங்கே இருக்கிறது? என்று கேட்டுள்ளார்.
Your 3-hour PIT STOP in Manipur is not compassion — it’s farce, tokenism, and a grave insult to a wounded people.
இதையும் படிக்க... உலக அழிவுக்கு ஒத்திகைப் பார்க்கப்படுகிறதா? கோர முகம் காட்டும் இயற்கை!