அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்வு?
எச்-1பி விசாவுக்கு இனிமேல் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படும்...
எச்-1பி விசாவுக்கு இனிமேல் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்ந்திருப்பதாக அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்கள் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அமெரிக்க அரசின் புதிய அறிவிப்பின்படி, எச்-1பி விசா பெற்று அமெரிக்காவில் வசிக்கும் வெலிநாட்டவர்கள், இந்திய நேரப்படி செப்டம்பர் 21, காலை 9.30 மணிக்குள் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. அதற்குப் பின் செல்பவர்களுக்கு புதிய நடைமுறைப்படி கூடுதல் கட்டண முறை அமலாகும்.
இதையடுத்து, முக்கியமான பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்கள் பகுதிகளிலிருந்து உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே எச்-1பி விசாவில் மெரிக்கவில் பணியாற்றும் இந்தியர்கள், இப்போது விடுமுறை எடுத்துக் கொண்டு தாயகம் வந்திருப்பின், அவர்கள் மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்ல நேரடி விமான சேவை இந்தியாவிலிருந்து அவசரமாக இல்லை. ஆகவே, அவர்கள் அனைவரும் மேற்கண்ட காலக்கெடுவுக்கு பின்னரே மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்வர்.
இந்த நிலையில், அந்த ஊழியர்கள் மீண்டும் அமெரிக்கா திரும்ப வேண்டுமெனில் அவர்களை பணியமர்த்தியிருக்கும் நிறுவனங்கள் கட்டாயம் அதிக கட்டணம் செலுத்தியாக வேண்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே, புது தில்லியிலிருந்து நியூயார்க் செல்லும் விமான கட்டணம் சுமார் ரூ. 37,000 என்ற அளவிலிருந்து பன்மடங்கு உயர்ந்து, இப்போது ரூ. 70,000 - ரூ. 80,000 ஆக உள்ளது. டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்த 2 மணி நேரத்துக்குள் இந்த கட்டண உயர்வு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னொருபுறம், அமெரிக்காவிலிருந்து தாயகம் செல்ல விமான நிலையம் சென்றடைந்த பன்னாட்டு ஊழியர்கள் பலரும் டிரம்ப்பின் அறிவிப்பு குறித்த தகவல் வெளியானதும், இப்போது தங்கள் பயணத் திட்டத்தை உடனடியாக ரத்துச் செய்துவிட்டு அமெரிக்காவிலேயே ஐக்கியமாகியிருக்கும் தகவல்களும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட அமெரிக்கவில் முக்கிய விமான நிலையங்களில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
H-1B holders in India saw a massive jump in the cost of a direct flight to the US
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.