முகப்பு
இந்தியா

இத்தாலி பிரதமர் மெலோனி சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை!

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ளார்.

Updated On : 29 செப்டம்பர், 2025 at 11:34 AM
பிரதமர் மோடி - இத்தாலி பிரதமர் மெலோனி
பகிர்:

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையின் இந்தியப் பதிப்புக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ அம் ஜார்ஜியா: மை ரூட்ஸ், மை ப்ரின்ஸிபில்ஸ் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்த சுயசரிதைக்கு முன்னுரை எழுதியுள்ள பிரதமர் மோடி, ``மெலோனியின் வாழ்க்கையானது அரசியல் மற்றும் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது. இது அவரது தைரியம், நம்பிக்கை, பொது சேவை மற்றும் இத்தாலி மக்களுக்கான அவரின் அர்ப்பணிப்பு பற்றியது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ``கடந்த 11 ஆண்டுகளில், பல உலகத் தலைவர்களுடன் பயணிக்கும் மற்றும் தொடர்புகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சில நேரங்களில், அவர்களுடனான பயணங்கள் தனிப்பட்ட விஷயங்களைத் தாண்டி பெரிய விஷயங்களாகவும் அமையும்.

இந்தப் புத்தகம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், பிரதமர் மெலோனி தனது வாழ்க்கையில் பல சாதனை நிகழ்வுகளைக் கொண்டுள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் ஊக்கமளிக்கும்.

மெலோனி பொறுப்பேற்றால், அவர் எப்படி செயல்படுவார் என்று பத்திரிகைகளும் அரசியல் ஆய்வாளர்களும் சந்தேகம் கொண்டனர். இருப்பினும், அவர் தனது நாட்டுக்கு வலிமையையும் நிலைத்தன்மையையும் வழங்கியுள்ளார். உலகளாவிய நன்மையை மேம்படுத்துவதில் அவர் உறுதியாக உள்ளார்.

பிரதமர் மெலோனியின் எழுச்சி மற்றும் தலைமைப் பண்பை பாராட்டுவதற்கு நிறைய இருக்கின்றன. அவரது வாழ்க்கைக்கும், இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வணங்கப்படும் தெய்வீக பெண் ஆற்றலான நாரி சக்திக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதாக நினைக்கிறேன்.

உலக அரங்கில் தனது நாட்டை வழிநடத்துவதற்கு, அவர் உறுதியான வேர்களைக் கொண்டுள்ளார். மெலோனியின் இந்த சுயசரிதை, ஐரோப்பா மற்றும் உலகின் ஆற்றல்மிக்க துடிப்பான தலைவர்களுள் ஒருவரின் இதயம் மற்றும் மனதைப் பற்றியது’’ என்று முன்னுரையில் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இத்தாலி ஆகிய இரு நாடுகள் மட்டுமின்றி, இரு நாட்டின் பிரதமர்களான மோடி மற்றும் மெலோனி ஆகியோருக்கு இடையேயும் நீண்டகால நட்புறவு இருந்து வருகிறது.

தங்கள் இருவரின் பெயர்களையும் சேர்த்து, மெலோடி என்றும் இத்தாலி பிரதமர் மெலோனி சமூக ஊடகங்களில் விடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கரூர் பலி: ஹேமமாலினி எம்.பி. தலைமையில் விசாரணைக் குழு

summary

PM Narendra Modi pens foreword for Italy PM Giorgia Meloni’s memoir — My Roots, My Principles

முழு கட்டுரையைப் படிக்க →