கேரளம்: ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் வாக்குறுதிகள்!
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையை கொச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டார்.
ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் ரேவந்த் ரெட்டி பேசுகையில், கேரளத்தில் இருண்ட காலம் (பினராயி விஜயன் ஆட்சி) முடிவுக்கு வருவதுடன், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைமையின்கீழ் ஒரு பொற்காலம் தோன்றவிருக்கிறது.
மாநிலத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கேரளத்தின் தற்போதைய அரசை மக்கள் வீழ்த்துவர்.
இந்தியாவும் கேரளமும் மோடியின் சகோதரர்களாலேயே ஆளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிர்வாகத்தின்கீழ் மத சொத்துகளுக்குக்கூட பாதுகாப்பில்லை. கடவுளின் சொந்த நாட்டில், கடவுளின் சொந்த சொத்துக்கே பாதுகாப்பில்லை என்று தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின்கீழ் போட்டியிடும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையில், அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், கல்லூரி படிப்பின்போது மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 நிதியுதவி, நலத்திட்ட ஓய்வூதியத்தை மாதம் ரூ. 3,000-ஆக உயர்த்துவது, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் பெயரில் ஒரு குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு, சுயதொழில் செய்யும் இளைஞர்களுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான வட்டியில்லாக் கடன், வயநாட்டில் பழங்குடியினர் பல்கலைக் கழகம், கடல்சார் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் 5 கனவுத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை வாக்குறுதிகளாகத் தெரிவித்துள்ளனர்.