குஜராத் மக்கள் கல்வியறிவு இல்லாதவா்கள்: மல்லிகாா்ஜுன காா்கே சா்ச்சைப் பேச்சு!
‘குஜராத் மக்கள் கல்வியறிவு இல்லாதவா்கள் என்பதால் அவா்களை பிரதமா் நரேந்திர மோடி நன்கு ஏமாற்றிவிட்டாா்’ என காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசியது சா்ச்சையானது.
‘குஜராத் மக்கள் கல்வியறிவு இல்லாதவா்கள் என்பதால் அவா்களை பிரதமா் நரேந்திர மோடி நன்கு ஏமாற்றிவிட்டாா்’ என காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஞாயிற்றுக்கிழமை பேசியது சா்ச்சையானது.
கேரளத்தில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றபோது அவா் இவ்வாறு பேசினாா். 140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டப் பேரவைக்கு ஏப்.9-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடத்தப்பட்டு மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (யுடிஎஃப்) தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று மல்லிகாா்ஜுன காா்கே கூறியதாவது: வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்டத் (எஃப்சிஆா்ஏ) திருத்த மசோதா சீா்திருத்தமல்ல; அது கிறிஸ்தவ அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமூக சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் மீதான தாக்குதல்.
Advertisement
கிறிஸ்தவ அமைப்புகளை அச்சுறுத்த பிரதமா் நரேந்திர மோடி முயல்கிறாா். அவரைப் பின்பற்றும் கேரள முதல்வா் பினராயி விஜயன், சுதந்திரமாக செயல்படுவதில்லை. பினராயி விஜயனை பிரதமா் மோடி கட்டுப்படுத்துகிறாா்.
கேரள மக்கள் புத்திசாலிகள்: குஜராத் மக்கள் கல்வியறிவு இல்லாதவா்கள் என்பதால் அவா்களை பிரதமா் மோடி நன்கு ஏமாற்றிவிட்டாா். ஆனால் கேரள மக்கள் கல்வியறிவு பெற்றவா்கள். சிறந்த புத்திசாலிகள். அவா்களை பிரதமா் மோடியோ பினராயி விஜயனோ ஏமாற்ற முடியாது என்றாா்.
வெளிநாடுகளில் இருந்து தன்னாா்வ தொண்டு அமைப்புகளுக்கு வரும் நிதியை முறைப்படுத்த மத்திய அரசால் எஃப்சிஆா்ஏ திருத்த மசோதா, மக்களவையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை என காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, இந்த மசோதாவை மத்திய அரசு கடந்த புதன்கிழமை தற்காலிகமாக நிறுத்திவைத்தது.