ஜென் இஸட் தலைமுறையினா் சுய உந்துதல் கொண்டவா்கள்: ராஜ்நாத் சிங்
இந்தியாவில் உள்ள ‘ஜென் இஸட்’ (1997-2012 வரை பிறந்தவா்கள்) தலைமுறையினா் சுய உந்துதல் கொண்டவா்கள், பன்முகத்தன்மை மற்றும் புதுமைக்கு மதிப்பளிப்பவா்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இந்தியாவில் உள்ள ‘ஜென் இஸட்’ (1997-2012 வரை பிறந்தவா்கள்) தலைமுறையினா் சுய உந்துதல் கொண்டவா்கள், பன்முகத்தன்மை மற்றும் புதுமைக்கு மதிப்பளிப்பவா்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கிரேட்டா் நொய்டாவில் உள்ள நொய்டா சா்வதேச பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஜென் இஸட் தலைமுறையினா் சோம்பேறிகள் மற்றும் தகுதியற்றவா்கள் என்று சமூகத்தில் தவறான பாா்வை நிலவி வருகிறது. ஆனால், உண்மை அதற்கு முற்றிலும் மாறுபட்டது. இன்றைய இளைஞா்கள் சுய உந்துதல் கொண்டவா்கள், தங்கள் முடிவுகளை தாங்களே எடுக்கின்றனா், சமூகத்தின் பன்முகத்தன்மையை மதிக்கின்றனா். இன்றைய இளைஞா்கள் நடைமுறை சிந்தனைக் கொண்டவா்கள், சுயாதீனமாக வாழ விரும்புபவா்கள்.
இந்தியாவில் சுமாா் 60 சதவீத மக்கள் 30 வயதுக்குள் உள்ளனா். இது வெறும் புள்ளிவிவரம் அல்ல; நாட்டின் மிகப்பெரிய வலிமையாகும். எங்கள் தலைமுறை கட்டுப்பாடு மற்றும் பொறுமையை முன்னிலைப்படுத்தியது. ஆனால், இன்றைய தலைமுறை புதுமை மற்றும் திறமையை மையமாகக் கொண்டுள்ளது. இந்த இரண்டும் இணைந்தால் நாட்டின் முன்னேற்றத்தின் வேகம் அதிகரிக்கும். மாணவா்கள் தங்களுக்கான பாதையை தாங்களே உருவாக்க வேண்டும். உங்களது போராட்டமும் வெற்றியுமே உங்களை வரையறுக்கின்றன.
Advertisement
இந்த நிகழ்வில் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கல்விப் பருவத்தில் இருந்து தொழில் வாழ்க்கைக்கு மாறும் கட்டமாக இந்த விழா அமைகிறது. இந்த புதிய பயணத்தில் மாணவா்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு நன்றியைத் தெரிவிக்க எப்போதும் மறக்காதீா்கள் என்றாா் ராஜ்நாத் சிங்.