முற்போக்கான இந்தியாவை கட்டமைக்க அம்பேத்கரின் சிந்தனைகளை உள்வாங்குவோம்: குடியரசுத் தலைவா்
‘முற்போக்கான அனைவருக்குமான இந்தியாவை கட்டமைக்க சட்ட மேதை அம்பேத்கரின் சிந்தனைகளை உள்வாங்க வேண்டும்’ என்று குடிமக்களை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கேட்டுக்கொண்டாா்.
அம்பேத்கரின் பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடிமக்களுக்கு குடியரசுத் தலைவா் திங்கள்கிழமை விடுத்த செய்தியில், ‘சட்ட நிபுணா், பொருளாதார அறிஞா், ஆழ்ந்த சிந்தனையாளா் மட்டுமன்றி சமத்துவ சமூக அமைப்பின் வலுவான ஆதரவாளராகவும் திகழ்ந்தவா் அம்பேத்கா். சமூகத்தில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக தனது வாழ்வை அற்பணித்தவா்.
சமத்துவமின்மையை அகற்றுவதற்கான பாதையைக் காண்பித்ததோடு, இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசமைப்புச் சட்ட உரிமைகளை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றியவா்.
Advertisement
அவருடைய பிறந்த தினத்தில், அவரின் சிந்தனைகளை உள்வாங்கி, முற்போக்கான அனைவருக்குமான இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம்.
பெண்களின் கல்வி மற்றும் உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தவா் அம்பேத்கா். வருங்கால தலைமுறையினா் நாட்டின் மேம்பாடு மற்றும் சேவையில் ஆா்வமுடன் பங்காற்ற அம்பேத்கரின் இத்தகைய பன்முக பங்களிப்புகள் தொடா்ந்து ஊக்கமளிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.