நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே
தொகுதி மறுவரையறை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிவு...
மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில் வரும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
நாடாளுமன்ற 3 நாள் சிறப்பு அமர்வு கூட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதாகவும் அதேநேரத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி வருகின்றன.
Advertisement
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில்,
"மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் கொண்டுவரப்படும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கின்றன.
மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில் குறைபாடுள்ள தொகுதி மறுவரையறை மசோதாக்களால் நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது. நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். நமது ஜனநாயகத்தின் மீதான இந்த வஞ்சகமானத் தாக்குதலை எங்களின் முழு பலத்தையும் கொண்டு எதிர்த்துப் போராடுவோம்" என்று பதிவிட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை நடத்திய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.