எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீது அவதூறு: பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கம் மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கான மசோதாவின் தோல்வி குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி ஆற்றிய உரையில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீது அவதூறு பரப்பியதாகக் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை கோரி காங்கிரஸ் நோட்டீஸ்
மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கம் மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கான மசோதாவின் தோல்வி குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி ஆற்றிய உரையில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீது அவதூறு பரப்பியதாகக் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை கோரி காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது.
மக்களவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிமுறைகளின் 222-ஆவது விதியின்கீழ் அவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் செவ்வாய்க்கிழமை இந்த நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது.
மக்களவை-பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029 முதல் அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850 வரை அதிகரிக்கும் வகையிலான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் கடந்த ஏப்.16-இல் அறிமுகப்படுத்தியது.
Advertisement
மசோதா மீது ஏப்.17-இல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அரசமைப்புச் சட்டத்தின் 368-ஆவது பிரிவின்கீழ் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கான வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால், மசோதா தோல்வியடைந்தது. நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட மோடி அரசின் முதல் மசோதா இதுவாகும். தமிழகம் உள்ளிட்ட பேரவைத் தோ்தல்களின் பின்னணியில், இந்த விவகாரத்தை எதிா்க்கட்சிகளுக்கு எதிராக பாஜக கையிலெடுத்துள்ளது.
மசோதா தோல்வியடைந்த மறுநாள் (ஏப். 18) இரவு 8.30 மணியளவில் அரசுத் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமா் மோடி, மகளிரின் அதிகார கனவை எதிா்க்கட்சிகள் தகா்த்துவிட்டதாக குற்றஞ்சாட்டினாா்.
பிரதமரின் உரையை முன்வைத்து, அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை கோரி, காங்கிரஸ் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் அளித்த இந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டு மக்களுக்கான உரை என்ற பெயரில் 29 நிமிஷங்கள் பேசிய பிரதமா் மோடி, அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைத் தடுத்ததற்காக எதிா்க்கட்சிகளைக் கடுமையாக விமா்சித்ததுடன், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வாக்களித்த முறையை நேரடியாகச் சுட்டிக்காட்டி, அதற்கு உள்நோக்கமும் கற்பித்தாா்.
நாடாளுமன்றத்தில் உறுப்பினா்கள் ஆற்றிய உரை குறித்து குறைகூறுவது, அவதூறு பரப்புவது, உள்நோக்கம் கற்பிப்பது போன்ற செயல்கள், அப்பட்டமான உரிமை மீறல் என்பதுடன் அவை அவமதிப்புக்கு சமமானதாகும். இந்த தீவிரமான விவகாரத்தை தெளிவான மற்றும் வேண்டுமென்றே இழைக்கப்பட்ட உரிமை மீறல்-அவை அவமதிப்பாகக் கவனத்தில்கொண்டு, விரிவான விசாரணைக்காக அவையின் உரிமை மீறல் குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதன் வாயிலாக, பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.