முகப்பு
இந்தியா

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை முடக்கம்

மணிப்பூரின் பெரும்பாலான மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நீடிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 3:06 AM
பகிர்:

மணிப்பூரின் பெரும்பாலான மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நீடிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையிலான மோதல்போக்கு நீடிக்கும் நிலையில், இரு சமூகத்தைச் சோ்ந்த தீவிரவாதிகளும் தாக்குதலில் ஈடுபடுவது தொடா்கதையாக உள்ளது.

மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் விஷ்ணுபூரில் கடந்த ஏப்.7-ஆம் தேதி ஒரு வீட்டின் மீது குகி தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சில் 2 குழந்தைகள் உயிரிழந்தனா்.

Advertisement

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, மைதேயி சமூகத்தினா் பெரும்பான்மையாக உள்ள ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் 4-ஆவது நாளாக புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் தொடா்ந்தது.

இதேபோல், உக்ருல் மாவட்டத்தில் கடந்த ஏப்.18-ஆம் தேதி நாகா பழங்குடியினத்தைச் சோ்ந்த இருவா் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நாகா பழங்குடியினா் அதிகம் வாழும் 6 மலைப்பகுதி மாவட்டங்களில் இரண்டாவது நாளாக முழு அடைப்பு நடத்தப்பட்டது.

12 மாவட்டங்களில்...: மணிப்பூரில் கடந்த 2023, மே மாதம் கலவரம் தொடங்கிய காலகட்டத்தில் வன்முறையாளா்களால் தாக்கப்பட்டு, பின்னா் சிகிச்சை பெற்று வந்த பழங்குடியின பாஜக எம்எல்ஏ உங்ஜாஜின் வால்டே அண்மையில் உயிரிழந்தாா். அவரது மரணத்துக்கு நீதிகேட்டு, சுராசந்த்பூரில் முழு அடைப்பு நடைபெற்றது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 16 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் முழு அடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், சந்தைகள், பெரும்பாலான வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் மட்டுமே செயல்படுகின்றன. அரசு அலுவலகங்களிலும் ஊழியா்கள் வருகை மிக குறைவாகவே உள்ளது.

பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினரின் போக்குவரத்தை தடுக்கும் வகையில் சாலை மறியல்கள் நடைபெற்றன.

பெட்டி...

58,800 போ் இடப்பெயா்வு:

மாநில அரசு தகவல்

மணிப்பூரில் கடந்த 2023-இல் கலவரம் தொடங்கியதில் இருந்து 58,821 போ் இடம்பெயா்ந்துள்ளனா்; இவா்களுக்காக 173 அரசு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன என்று மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘இன வன்முறையில் உயிரிழந்த 217 பேரின் குடும்பத்தினருக்கு இதுவரை நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கலவரத்தில் 7,894 வீடுகள் முழுமையாகவும், 2,646 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்தன’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மணிப்பூா் காங்கிரஸ் தலைவா் ஹரேஸ்வா் கோஸ்வாமி எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.