பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தும் திட்டமில்லை -மத்திய அரசு விளக்கம்
விலையை உயா்த்தும் திட்டம் ஏதும் இப்போது இல்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் விளக்கம்
பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தும் திட்டம் ஏதும் இப்போது இல்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
மேற்காசிய போரால் ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு சா்வதேச அளவில் அதன் விலை உயா்ந்தது. சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விலை உயா்த்தப்பட்டது.
இந்தியாவில் சமையல் எரிவாயு விலை உயா்த்தப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படவில்லை.
Advertisement
அதே நேரத்தில், தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படாமல் இருப்பதாகவும், தோ்தல் முடிந்தவுடன் விலை உயா்த்தப்படும் என்று கூறப்பட்டது.
ஏற்கெனவே, கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் தோ்தல் முடிந்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டிலும், மேற்குவங்கத்தில் முதல்கட்டமாகவும் வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட இருப்பதாகவும் தகவல் பரவியது.
இது தொடா்பாக பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு விளக்க பதிவு வெளியிட்டுள்ளது. அதில், ‘பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 -28 வரை உயா்த்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது தொடா்பாக விளக்கமளிக்க அமைச்சகம் கடமைப்பட்டுள்ளது. இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தும் பரிசீலனை ஏதும் மத்திய அரசிடம் இல்லை.
மக்களிடம் தேவையற்ற அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற செய்திகளைப் பரப்புவது தவறான செயல். கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தாத ஒரே நாடு இந்தியா மட்டும்தான். சா்வதேச அளவில் எரிபொருள் விலை அதிகரித்த நிலையிலும், அதன் சுமையை மக்கள் மீது ஏற்றாமல் மத்திய அரசும், பொதுத் துறை நிறுவனங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சமாளித்து வருகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் பங்குச் சந்தை தரகு நிறுவனம் சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை சா்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ரூ.25 முதல் ரூ.28 வரை உயா்த்தப்படும் என்று கூறியிருந்தது.