மத்திய பட்ஜெட்டில் முக்கிய பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "பட்ஜெட்டில் எந்தத் திருத்தத்தை அவர் குறிப்பிடுகிறார் என எனக்குத் தெரியவில்லை. பொருளாதாரமும் அதன் அடிப்படைகளும் வலுவாகவே உள்ளன.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மையை பல துறைகளும் எதிர்கொண்டு வருகின்றன. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக, ஜவுளி, தோல், கிராமப்புறங்களில் பணிபுரியும் மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்கள், விவசாயிகளுக்கு மதிப்புக் கூட்டல், பெண் தொழில்முனைவோர் மற்றும் சுய உதவி தொழில்முனைவோருக்கும் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
வெளியிலிருந்து வரும் எந்தவொரு நிலையற்ற தன்மையும் பாதித்துவிடக் கூடாது என்பதை உறுதிசெய்துள்ளோம்.
அரசியல் ரீதியாக நீங்கள் (ராகுல்) விமர்சிக்கிறீர்கள் என்றால், வரவேற்கப்படுகிறீர்கள். ஆனால், உண்மைத்தன்மையுடைய வாதத்தை மட்டுமே கேட்க விரும்புகிறோம். அதற்கு பதிலளிக்கவும் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, வீழ்ச்சியடைந்து வரும் உற்பத்தி, மூலதனத்தை இழந்துவரும் முதலீட்டாளர்கள், சரிந்து வரும் வீட்டு சேமிப்பு, விவசாயிகளின் நிலைமை, உலகளாவிய அதிர்ச்சி நிலைமை ஆகிய அனைத்தும் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.