குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றம்!
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைப் பற்றி...
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுரையுடன் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு கடந்த ஜனவரி 28 ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவைகளின் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
மக்களவையில் அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று உரையாற்றவிருந்த நிலையில் அதனை தவிர்த்துவிட்டார். இதையடுத்து, பிரதமர் மோடியின் பதில் உரை இல்லாமல் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் இன்று காலை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று மாலை மாநிலங்களவையில் நடத்தப்பட்ட விவாதத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவை நிறைவேற்றியது. மேலும், மாநிலங்களவை இன்று ஒத்திவைக்கப்பட்டு நாளை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என்றும் அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.