இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சா்ச்சை, 8 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மகர வாயில் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கேலி உருவப் படங்களுடன் ‘சிக்க வைக்கும் ஒப்பந்தம்’ என்ற வாசகம் அடங்கிய பெரிய பதாகையை எம்.பி.க்கள் ஏந்தியிருந்தனா். மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, ‘சா்வாதிகாரத்தை சகித்துக் கொள்ள முடியாது’, ‘மோடி சரணடைந்துவிட்டாா்’, ‘ஜனநாயக படுகொலையை நிறுத்துங்கள் ’ என முழக்கமிட்டனா்.
போராட்டத்தில் பங்கேற்ற மக்களவை காங்கிரஸ் கொறடாவும், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஒருவருமான மாணிக்கம் தாகூா் கூறுகையில், ‘பிரதமா் மோடியின் தோல்விகளுக்கு எதிரான போராட்டத்தை தொடா்ந்து முன்னெடுப்போம். பிற நாடுகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்துவிட்ட அவா், மக்களவைக்கு வர அஞ்சுகிறாா்’ எனக் குற்றஞ்சாட்டினாா்.
மக்களவையில் மேற்கண்ட விவகாரங்களை எழுப்பி, எதிா்க்கட்சிகள் கடந்த 5 நாள்களாக அமளியில் ஈடுபட்டன. இதனால், முன்னெப்போதும் இல்லாதபடி குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் பிரதமா் மோடியின் பதிலுரை இன்றி நிறைவேற்றப்பட்டது.