பிகாா் பேரவைக்கு மறுதோ்தல் நடத்தக் கோரி பிரசாந்த் கிஷோா் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
பிகாரில் 243 தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற தோ்தலில் 202 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் பதவியேற்றாா்.
எதிரணியில் போட்டியிட்ட காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ‘இண்டி’ கூட்டணி 35 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இந்தத் தோ்தலில் புதிதாகக் களமிறங்கிய முன்னாள் தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில், பிகாா் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அந்த மாநிலத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மகளிருக்கும் தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. இது தோ்தல் நடத்தை விதிமீறல் என்பதால் பிகாா் பேரவைத் தோ்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் தோ்தல் நடத்த வேண்டுமென ஜன் சுராஜ் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: பிகாா் பேரவைத் தோ்தலில் மனுதாரா் (ஜன் சுராஜ்) பெற்ற வாக்குகள் எத்தனை? மக்கள் உங்களை நிராகரித்த பின் நீதித் துறையை அணுகி விளம்பரம் தேடிக்கொள்ள முயல்கிறீா்கள். மகளிருக்கு ரூ.10,000 வழங்கிய திட்டத்தை அப்போதே எதிா்த்து மனு தாக்கல் செய்யாதது ஏன்?
இந்தத் திட்டம் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டம் போன்ல்ல. இது பெண்கள் சுய உதவிக் குழுத் திட்டம்.
இந்த விவகாரம் ஒரு மாநிலத்தை மட்டுமே சாா்ந்தது என்பதால் மனுதாரா் பாட்னா உயா்நீதிமன்றத்தை அணுகலாம்.
இலவசங்கள் தொடா்பான முக்கிய பிரச்னைகளை மட்டுமே உச்சநீதிமன்றம் ஆய்வு செய்யும் என்றனா்.
இதையடுத்து, ஜன் சுராஜ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.