உத்தரப் பிரதேசத்தில் கால்வாய் அருகே மலம் கழித்த விவகாரத்தில் தாக்குதலுக்குள்ளான தலித் இளைஞரின் கண் பார்வை பறிபோனது.
உத்தரப் பிரதேச மாநிலம், அவுராய் பகுதியில் உள்ள கால்வாய் அருகே ராகுல்(20) வெள்ளிக்கிழமை மதியம் மலம் கழிக்கச் சென்றுள்ளார். இதற்கு சங்கர் பிந்த் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ராகுல் தப்பிக்க முயன்றபோது, சங்கர் பிந்த் இருசக்கர வாகன சாவியை ராகுலின் இடது கண்ணில் குத்தி, அவரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் ராகுல் கடும் வலியால் தரையில் விழுந்துள்ளார். தாக்குதல் நடத்தியவர் ராகுலை சாதி ரீதியாக இழிவாகப் பேசித் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் கூடியதைக் கண்டதும் சங்கர் பிந்த் தப்பி ஓடிவிட்டார். தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த இளைஞரைச் சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவர் அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக வாரணாசிக்கு கண் பார்வை பறிபோன நிலையில் பரிந்துரைக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவரின் தந்தை ராம் தானி அளித்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சங்கர் பிந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.