மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா தீர்மான அறிவிப்பு மார்ச் 9 ஆம் தேதியில் தெரிய வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகவும், பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதியளிப்பதில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 94 (சி) பிரிவின்கீழ் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவைச் செயலகத்திடம் எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ளன.
மக்களவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின்போது, அவைக்கு அவர் தலைமை தாங்க முடியாது. எனினும், அவையில் ஒரு எம்.பி.யாக இருக்கலாம்.
இருப்பினும், தீர்மானம் விவாதிக்கப்பட்டு, முடிவு செய்யப்படும்வரையில், அவை நடவடிக்கைகளில் ஓம் பிர்லா கலந்துகொள்ள மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
மக்களவைத் தலைவர் பதவி நீக்கம் சாத்தியமா?
சட்டப்பிரிவு 94 (சி), தீர்மானம் மூலம் அவைத் தலைவரை அவை நீக்க அனுமதிக்கிறது.
அவைத் தலைவரை நீக்குவதற்கான எழுத்துப்பூர்வ நோட்டீஸை, குறைந்தது 14 நாள்களுக்கு உறுப்பினர் வழங்க வேண்டும்.
தீர்மானம் விவாதிக்கப்படுவதற்கு, குறைந்தபட்சம் 50 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும்.
தீர்மானம் நிலுவையில் இருக்கும்போது, அவைத் தலைவர் தலைமை தாங்க முடியாது. ஆனால், பிரிவு 96-ன் படி அவையில் கலந்து கொள்ளலாம்.
இந்தத் தீர்மானம், மக்களவையின் உறுப்பினர்களின் பெரும்பான்மையால நிறைவேற்றப்பட வேண்டும்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அவைத் தலைவர் உடனடியாக நீக்கப்படுவார். ஆனால், எம்.பி. பதவியில் தொடர்ந்து நீடிப்பார். தீர்மானம் நிராகரிக்கப்பட்டால், அவைத் தலைவராகவே பதவி வகிப்பார்.
நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸில் தேவையான கையொப்பங்கள் இருப்பதால், 14 நாள் அறிவிப்பு காலத்துக்குப் பிறகு, தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படலாம்.
இருப்பினும், நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது நீக்க நடவடிக்கை மூலம் மக்களவைத் தலைவர்கள் யாரும் இதுவரையில் நீக்கப்பட்டதில்லை. ஆனால், மக்களவைத் தலைவரை நீக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு முன்னதாக 1954-ல் ஜி.வி. மவலங்கர், 1966-ல் சர்தார் ஹுகம் சிங், 1987-ல் பலராம் ஜாகர் ஆகியோருக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், தீர்மானங்கள் தோல்வியிலேயே முடிந்தது.
ஆனால், 1969-ல் நீலம் சஞ்சீவ ரெட்டி மக்களவைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். அதே வேளையில், அவர் குடியரசுத் தலைவராகவும் ஆனார்.
முதல் மக்களவைத் தலைவரான ஜி.வி. மவலங்கர், பதவியில் இருந்தபோதே காலமானார். 2002-ல் மக்களவைத் தலைவராக இருந்த ஜி.எம்.சி. பாலயோகி, ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.