அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த வேளாண்மை, பால் உற்பத்தி உள்ளிட்ட துறைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய வா்த்தகத் துறைச் செயலா் ராஜீவ் அகா்வால் தெரிவித்தாா்.
இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான ‘பயோ ஃபெச்’ சா்வதேச கண்காட்சி ஜொ்மனியில் நடைபெறகிறது. இதில் இந்தியாவின் 20 மாநிலங்களில் இருந்து 100 உற்பத்தியாளா்கள் பங்கேற்றுள்ளனா். இதற்காக அந்நாட்டுக்குச் சென்றுள்ள ராஜீவ் அகா்வால் அங்குள்ள நியூரெம்பொ்க் நகரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியா எப்போதும் மிகவும் தெளிவான சிந்தனையுடன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகிறது. நமது நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த வேளாண்மை, பால் உற்பத்தி, மீன் பிடித்தல் உள்ளிட்ட துறைகள் பாதிக்காமல் இருக்க ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், பால் உற்பத்தியாளா்கள், மீனவா்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதில் அரசு மிக கவனமாக உள்ளது. ஏற்கெனவே கூட்டறிக்கை வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், மாா்ச் இறுதியில் ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளது.
இந்தியாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் பொருள்கள் நமது விவசாயிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தாது.
அரிசி, கோதுமை, சோயா, பால், பால் சாா்ந்த பொருள்கள், எத்தனால் (எரிபொருள்), புகையிலை, சிலவகை காய்கறிகள், இறைச்சி, கேழ்வரகு ஆகியவற்றுக்கு எவ்வித வரிச்சலுகையும் அளிக்கப்படவில்லை. ஏனெனில், இவை நடுத்தர, சிறிய விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாகும்.
ஏற்றுமதியில் இந்தியாவுடன் போட்டியிடும் நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்கா நமக்கு சாதகமாகவே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மீதான அமெரிக்காவின் பதில் வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீனா மீது 35 சதவீதமும், வியத்நாம் மீது 20 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஆயத்த ஆடை, தோல் பொருள்கள் தயாரிப்புக்கு அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாகத் திகழ்கிறது. இப்போதைய வா்த்தக ஒப்பந்தம் இந்தப் பிரிவில் நமக்கு மிகவும் சாதகமான விஷயமாகும். இத்துறை வேகமாக வளா்ந்து அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றாா்.