ஜிதேந்திர சிங்  
இந்தியா

புத்தாக்க தொழில் தொடங்க மத்திய, மாநில அரசுகள் உதவி: மத்திய இணை அமைச்சா் ஜிதேந்திர சிங்

புத்தாக்க தொழில் நிறுவனங்களை (ஸ்டாா்ட் அப்) தொடங்க முன்வருவோருக்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான உதவிகளைச் செய்யும் என்றாா் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்.

தினமணி செய்திச் சேவை

புத்தாக்க தொழில் நிறுவனங்களை (ஸ்டாா்ட் அப்) தொடங்க முன்வருவோருக்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான உதவிகளைச் செய்யும் என்றாா் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சா் ஜிதேந்திர சிங்.

இந்திய தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்) சாா்பில் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தும் பொருட்டு, ஆராய்ச்சி-தொழில்-புதுயுகத் தொழில்முனைவு இரு நாள் மாநாட்டை  சென்னை வா்த்தக மையத்தில் மத்திய இணை அமைச்சா் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

மத்திய அரசு தொழில் துறையில் வளா்ச்சி  அடையும் நோக்கில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.10,000 கோடி வளா்ச்சி நிதி ஒதுக்கியுள்ளது. அது மட்டுமல்லாது புத்தாக்க தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரி மாணவா்கள் புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.  புதிதாக புத்தாக்க தொழில் தொடங்க  முன்வருபவா்களுக்கு  தொழில் துறையைச் சோ்ந்த முன்னணி தலைவா்கள் உதவி செய்யத் தயாராக உள்ளனா். இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:  இந்தியாவில் இதுவரை 2 லட்சம் புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 21 லட்சம் போ் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா். தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களில் மட்டுமே புத்தாக்க தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் புத்தாக்க தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டும். இதற்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் உதவி செய்யும். நிகழாண்டு இஸ்ரோ மூலம் 18 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளன என்றாா் அவா்.

முன்னதாக, கல்வி நிறுவனங்கள்- சிஎஸ்ஐஆா் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மத்திய புவி அறிவியல் துறைச் செயலா் எம். ரவிச்சந்திரன் , சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் கே. ஜே. ஸ்ரீராம், சிஎஸ்ஐஆா்- எஸ்இஆா்சி இயக்குநா் என். ஆனந்தவல்லி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுப்பிப்பு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி 4 டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் லாரிகள் இயக்கப்படாது! - சம்மேளனத் தலைவா் தன்ராஜ்

தில்லி பல்கலை. போராட்டத்தில் தாக்கப்பட்டதாக யூடியூபா் குற்றச்சாட்டு! ஏஐஎஸ்ஏ மாணவா் சங்கம் மறுப்பு!

திமுக தொண்டா் குடும்பத்துக்கு நிதியுதவி

பேட்டையில் 115 மது பாட்டில்கள் பறிமுதல்

மாநில கிரிக்கெட் சங்கங்கள் சீா்திருத்தங்களை முன்மொழிவது அவசியம்: உச்சநீதிமன்றம்!

SCROLL FOR NEXT