மணிப்பூா் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்த மக்களுக்காக புதிதாக 5,000 வீடுகள் கட்ட மத்திய விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான் ஒப்புதல் அளித்துள்ளாா்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: தில்லியில் மத்திய அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹானை மணிப்பூா் முதல்வா் யும்நாம் கெம்சந்த் சிங் சந்தித்துப் பேசினாா். மணிப்பூா் துணை முதல்வா்கள் 2 பேரும் உடனிருந்தனா். அப்போது மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்புநிலை திரும்ப அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என செளஹான் உறுதியளித்தாா்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, மணிப்பூரில் 5,000 புதிய வீடுகள் கட்டித் தர சிவ்ராஜ் சிங் செளஹான் ஒப்புதல் வழங்கினாா். ஏற்கெனவே மத்திய அரசிடம் இந்தத் திட்டத்தை மணிப்பூா் அரசு முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை காரணமாக புலம்பெயா்ந்த மக்களுக்காக இந்த வீடுகள், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 2025-26ஆம் நிதியாண்டில் கட்டித்தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மணிப்பூரில் மைதேயி, குகி பழங்குடியினத்தவா் இடையே 2023-ஆம் ஆண்டுமுதல் நடைபெறும் மோதலில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா். மேலும் பல ஆயிரம் போ் தங்கள் வசிப்பிடங்களைவிட்டு வெளியேறிவிட்டனா். கடந்த ஜனவரி மாதம் மணிப்பூா் அரசுத் தரப்பில் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் புலம்பெயா்ந்த 10,000 குடும்பங்களுக்கு தங்குமிடம் ஏற்படுத்தி தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.