முகப்பு
இந்தியா

கேரள அரசு தேசிய பேரிடர் தணிப்பு நிதியை முறையாகக் கோரவில்லை: நிர்மலா சீதாராமன்!

தேசிய பேரிடர் தணிப்பு நிதி பற்றி மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு...

Updated On : 23 மார்ச், 2026 at 7:31 AM
நிர்மலா சீதாராமன் - dps
பகிர்:

தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ரூ. 311.95 கோடியை கேரளம் அரசு முறையாகக் கோரவில்லை என மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

கேரளாவிற்கு மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிலுவை மானியங்கள் மற்றும் தொகைகள் குறித்த கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

இதுதொடர்பாக நிதியமைச்சர் கூறியதாவது,

மத்திய மானியங்களுக்கான ஒப்புதல் அளிப்பது என்பது ஒரு விஷயம் என்றால், அந்தத் தொகையை மாநிலங்கள் முறையாகக் கோரிப் பெறுவது மற்றொரு விஷயம். தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் ஒரு பகுதியாகக் கேரளத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 311.95 கோடியை, அந்த மாநில அரசு இதுவரை பெற்றுப் பயன்படுத்தவில்லை.

மத்திய அரசு அடுத்தகட்ட நிதியை விடுவிக்க வேண்டுமானால், மாநில அரசு ஏற்கெனவே பெற்ற நிதியை எவ்வாறு பயன்படுத்தியது என்பதற்கான பயன்பாட்டுச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கேரளத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும், அந்த நிதியை கேரள அரசு வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துப் பயன்படுத்தவில்லை என்பதை அவர் குறிப்பிட்டார்.

வயநாட்டின் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடர் தணிப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் ரூ. 72 கோடியை உள்ளடக்கிய, தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் ரூ. 311.945 கோடி ஒதுக்கப்பட்டது.

வயநாடு பேரிடருடன் தொடர்பில்லாத வனத் தீயைத் தடுக்கும் திட்டத்திற்காக மேலும் ரூ. 17.73 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதோடு, திருவனந்தபுரம் நகர்ப்புற வெள்ள இடர் மேலாண்மைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ரூ. 222.22 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மாநில அரசு முறையாக விண்ணப்பித்து கோரிக்கை விடுத்து அதற்கான விவரங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே நான் நிதியை விடுவிப்பேன். எனவே, ஒப்புதல் அளிப்பது ஒரு விஷயமென்றால், அதை முறையாகக் கோரிப் பெறுவது மற்றொரு விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.

வயநாடு பேரிடர் மேலாண்மைப் பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதியுதவி தொடர்பாக, மத்திய அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்த நிலையில், கேரளத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Union Finance Minister Nirmala Sitharaman informed the Lok Sabha that the Kerala government has not formally requested Rs 311.95 crore from the National Disaster Mitigation Fund.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.