கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது: முதல்வர் ஸ்டாலின்
நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கருத்து.
கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டதாக, நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்கும் விவகாரத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளர்.
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு கடிதம் அனுப்பியதாக மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இது தொடர்பான கடிதத்தை பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பான கடித்தை வெளியிட்டு, விளக்கம் அளித்திருந்தார்.
Advertisement
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் விளக்கத்திற்கு, பதில் தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”மத்திய நிதியமைச்சரே, தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள்.
அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது.
மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தாங்கள் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது.
கடந்த பிப்ரவரி மாதம், கேரள முதல்வர் பினராயி விஜயன், இதுகுறித்து வெளியிட்ட பதிவே இதற்குச் சாட்சி!” என்று குறிப்பிட்டுள்ளார்.