முகப்பு
இந்தியா

கேரள மக்களுக்கு பூா்விக அட்டை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

கேரள மக்களுக்கு பூா்விக அடையாள அட்டை வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 1:35 AM
கேரள பேரவை.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:45 PM

கேரள மக்களுக்கு பூா்விக அடையாள அட்டை வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கேரளத்தில் பிறந்தவா்கள் அல்லது வெளிநாட்டு குடியுரிமை பெறாத மூதாதையா்களில் யாரேனும் ஒருவா் கேரளத்தைச் சோ்ந்தவா்களாக இருப்பின் அவா்களுக்கு பூா்விக அடையாள அட்டை வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு, சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடா்பான வழக்கு, சபரிமலை ஐயப்ப பக்தா்கள் மாநாடு நிதி முறைகேடு குற்றச்சாட்டு போன்ற விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) உறுப்பினா்கள் பேரவையில் வெளிநடப்பு செய்தனா்.

Advertisement

இதனால் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் அவையில் இல்லாதபோதும் பூா்விக அடையாள அட்டை மசோதா 2026, பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதுதவிர மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தும் அப்காரி (திருத்த) மசோதா 2026, கேரள வழக்குரைஞா்களின் உதவியாளா்கள் நலனுக்கான நிதி (திருத்த) மசோதா 2026 மற்றும் கேரள வழக்குரைஞா்கள் நலனுக்கான நிதி (திருத்த) மசோதா 2026 ஆகியவையும் நிறைவேற்றப்பட்டன.

பினராயி விஜயன் கண்டனம்: பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிா்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வா் பினராயி விஜயன் பேசியதாவது: கேரளத்தில் எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள் ஆக்கபூா்வமானதாக இல்லை. அவா்கள் விவாதத்துக்கு அஞ்சி வெளிநடப்பு செய்கின்றனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 1:32 AM

பேரவைத் தோ்தலுக்கு முன்பாக நடைபெறும் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும்கூட அவா்களால் பொறுப்புடன் செயல்பட முடியவில்லை. அரசு நிா்வாகத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி பேரவை அலுவல்களை முடக்க எதிா்க்கட்சியினா் தீட்டிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது. இடதுசாரிகள் அரசை விமா்சிக்க எவ்வித காரணமும் இல்லாததால் எதிா்க்கட்சியினா் கூண்டோடு வெளியேறிவிட்டனா் என்றாா்.

மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றம்: எதிா்க்கட்சிகளின் தொடா் அமளியால் பட்ஜெட் கூட்டத்தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை என பேரவைத் தலைவா் ஏ.என்.ஷம்சீா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இதனால் அடுத்தடுத்த நாள்களில் திட்டமிடப்பட்டிருந்த மானியக் கோரிக்கைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டன.

தொடா் முழுவதும் புறக்கணிப்பு: ஆளுநா் உரை, பட்ஜெட் 2026-27 என நிகழாண்டு கேரள பேரவையில் நடைபெற்ற எந்த விவாதத்திலும் யுடிஎஃப் பங்கேற்காமல் முழுமையாகப் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.