தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலிதுக்கு நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி கடிதம் எழுதியதற்கு, பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
நியூயார்க் நகரத்தின் புதிய மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி, கடந்த வியாழக்கிழமை (ஜன. 1) பதவியேற்றுக்கொண்டார்.
இதையடுத்து, 2020 தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் ஆர்வலருமான உமர் காலிதுக்கு நியூயார்க் மேயர் மம்தானி கடிதம் எழுதியுள்ளார்.
உமர் காலிதின் உறவினர் பனோஜோத்ஸ்னா லஹிரி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்த மம்தானி எழுதி கையொப்பமிட்ட கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:
“அன்புள்ள உமர், கசப்புணர்வு குறித்த உங்களது வார்த்தைகளையும், அது ஒருவரை முழுவதுமாக ஆட்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதையும், நான் பல நேரங்களில் நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் பெற்றோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
இந்தக் கடிதம், இணையத்தில் மிக வேகமாகப் பகிரப்பட்டு வந்த நிலையில் மம்தானி இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் 140 கோடி இந்தியர்களும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஒன்று திரண்டு நிற்பார்கள்.
நமது ஜனநாயகம் மற்றும் நீதித்துறை குறித்து கேள்வி எழுப்ப இந்த அந்நியர் (மம்தானி) யார்? அதுவும் இந்தியாவை உடைக்க விரும்பும் ஒருவருக்கு ஆதரவாக? இது ஏற்புடையதல்ல!” என்று அவர் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.