சத்தீஸ்கரில் ஒரே நாளில் 52 நக்சல்கள் சரண்!
சத்தீஸ்கரில் ஒரே நாளில் 52 நக்சல்கள் சரணடைந்துள்ளது குறித்து...
சத்தீஸ்கர் மாநிலத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 49 பேர் உள்பட 52 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (ஜன. 15) சரணடைந்துள்ளனர்.
பிஜப்பூர் மாவட்டத்தில், ஆந்திரம், ஒடிசா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வந்த 21 பெண் நக்சல்கள் உள்பட 52 நக்சல்கள் இன்று மூத்த காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சரணடைந்துள்ள நக்சல்கள் குழுவில் உள்ள 49 பேரைப் பிடிப்பதற்காகக் கூட்டாக ரூ. 1.41 கோடி வெகுமதி அறிவித்து காவல் துறை அதிகாரிகள் தேடி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள நக்சல்கள் அனைவருக்கும் அரசின் மறுவாழ்வுத் திட்டங்களின் மூலம் உடனடியாக ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
முன்னதாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,500 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். மேலும், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாட்டிலுள்ள நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.