ஆந்திரம்: முன்னாள் காதலரின் மனைவிக்கு ஊசி மூலம் எச்.ஐ.வி வைரஸ் செலுத்திய பெண் கைது
ஆந்திரத்தில் முன்னாள் காதலரின் மனைவிக்கு ஊசி மூலம எச்.ஐ.வி வைரஸ் செலுத்திய பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரத்தில் முன்னாள் காதலரின் மனைவிக்கு ஊசி மூலம எச்.ஐ.வி வைரஸ் செலுத்திய பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்த வசுந்தரா (34). இவருடைய முன்னாள் காதலர் வேறொரு பெண்ணை மணந்துள்ளார். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத வசுந்தரா, அவர்களை பிரிக்க எண்ணினார். இதற்காக செவிலியர் கோங்கே ஜோதி (40) மற்றும் 20 வயதுடைய அவரது இரண்டு பிள்ளைகளுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்.
தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியரான முன்னாள் காதலரின் மனைவி ஜனவரி 9ஆம் தேதி மதிய உணவிற்கு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது மூன்று பேருடன் இணைந்து சதி செய்து சாலை விபத்தை ஏற்படுத்திய வசுந்தரா, காதலரின் மனைவிக்கு ஆட்டோவில் வைத்து எச்.ஐ.வி வைரஸை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் வசுந்தரா உள்பட நான்கு பேரைக் கைது செய்தனர். போலீஸார் கூறுகையில், ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தேவை எனக் கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடமிருந்து எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்த மாதிரிகளை வசுந்தரா பெற்றுள்ளார்.
பின்னர் அதனை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து தனது முன்னாள் காதலரின் மனைவிக்கு அவர் செலுத்தியுள்ளார். இச்சம்பவம் ஆந்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.