நீட் தேர்வு: மீண்டும் வினாத்தாள் கசிந்தால் பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்!
நீட் மறுதேர்வில் வினாத்தாள் கசிந்தால் பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்தது பற்றி...
நீட் மறுதேர்விலும் வினாத்தாள் கசிந்தால், நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ராஜிநாமாவைக் கோர வேண்டியிருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் கொடுக்கப்பட்ட நீட் வினாத்தாள், தேர்வுக்கு முன்பே கசிந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், அது உறுதி செய்யப்பட்டது. எனவே அந்தத் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வுக்கான தேதியாக வரும் ஜூன் 21-ஐ தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர், பேராசிரியர் மற்றும் நீட் பயிற்சி மையத்தின் உரிமையாளர் உள்பட பத்துக்கும் மேற்பட்டோரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றது.
Advertisement
Advertisement
இது குறித்து காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் பேசியதாவது:
நீட் மறுதேர்வை பிரதமர் நேரில் கண்காணித்து வருவதாக சொலிசிட்டர் ஜெனரல் நமக்குத் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானின் தோல்விகளால் பிரதமர் மோடி மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதால், அவர் அனைத்துப் பொறுப்புகளையும் தானே ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது பொதுவெளியில் தெரியவந்துள்ளது.
எனவே, பிரதமர் பதில் சொல்ல வேண்டியவர். மறுதேர்வு முறையாக நடத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒருவேளை, மீண்டும் வினாத்தாள் கசிந்தால், நாங்கள் பிரதமரின் ராஜிநாமாவைக் கோர வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தது குறிப்பிடத்தக்கது.