சிபிஐயிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!
பாஜகவில் இணைந்தது பற்றி முகுந்தன் கூறியதாவது..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ சி. சி. முகுந்தன் கேரள பாஜகவில் இணைந்தார்
பட்யலினத்தவருக்காக (எஸ்சி) ஒதுக்கப்பட்ட நாட்டிகா தொகுதியில் தன்னை மீண்டும் வேட்பாளராகப் பரிசீலிக்காதது குறித்து சிபிஐ கட்சி மீது அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து முகுந்தன் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
முன்னதாக, அவர் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். புது தில்லியில் அக்கட்சியின் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், திருச்சூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகுந்தன் அக்கட்சியில் இணைந்தார்.
இதுதொடர்பாக முகுந்தன் கூறியாதவது,
எஸ்சி, எஸ் சமூகங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் பங்களிக்கும் ஆற்றல் கொண்ட கட்சி பாஜக. மேலும், பல மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்புடன் நான் இக்கட்சியில் இணைந்துள்ளேன்.
மக்களின் நலன்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்குச் சிறந்த அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதும் எனது விருப்பமாகும். பாஜகவிற்கு எப்போதும் விசுவாசத்துடன் இருப்பேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டதாக முகுந்தன் கூறினார்.
நடைபெற உள்ள தேர்தலில் தான் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்ததை ஒப்புக்கொண்ட அவர், அக்கட்சியுடனான முயற்சி ஏன் கைகூடவில்லை என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
நாட்டிகா தொகுதியில் போட்டியிட தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்காமல், அதற்குப் பதிலாக முன்னாள் எம்எல்ஏ கீதா கோபியைத் தேர்வு செய்த சிபிஐ தலைமை மீது முகுந்தன் கடந்த வாரம் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
முகுந்தன் பாஜகவில் இணைந்த இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் மூத்த தலைவர்களான ஏ.என். ராதாகிருஷ்ணன், பி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
MLA C C Mukundan, who was expelled from the CPI, joined the BJP here on Monday.