மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
பாஜக எம்எல்ஏ அக்னிமித்ரா பாலின் கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்..
மேற்கு வங்கத்தின் அசன்சோல் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக எம்எல்ஏ அக்னிமித்ரா பாலின் கார் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் தனது வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அசன்சோல் தெற்கு சட்டப்பேரவை, ரஹ்மத் நகர் அருகே பாஜக எம்எல்ஏ அக்னிமித்ரா பாலின் கார் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் காரின் பின் பக்கக் கண்ணாடிகள் நொறுங்கியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
இதுதொடர்பாக அக்னிமித்ரா பால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வாக்களித்து விட்டு வாக்குச்சாவடி வளாகத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தபோது, எனது கார் மீது சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். எனது காரின் பின் பக்கக் கண்ணாடி நொறுங்கிவிட்டது.
இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இது தேர்தலைச் சீர்குலைக்கும் முயற்சியாகும். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், 152 தொகுதிகளில் நடைபெற்று வரும் முதல் கட்ட வாக்குப் பதிவின்போது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மோதல்கள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.