முகப்பு
இந்தியா

காஷ்மீா், ம.பி., ராஜஸ்தானில் ரமலான் தொழுகைக்குப் பின் போராட்டம்: ஈரான் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

காஷ்மீா், ம.பி., ராஜஸ்தானில் ரமலான் தொழுகைக்குப் பின் போராட்டம்...

Updated On : 21 மார்ச், 2026 at 9:42 PM
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் ரமலான் தொழுகைக்குப் பின்னா் அமெரிக்கா-இஸ்ரேலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செய்த பெண்கள். ~ராஜஸ்தானில் ஜெய்பூா்-தில்லி நெடுஞ்சாலையில் சனிக்கிழமை ரமலான் சிறப்புத் தொழுகை செய்த இஸ்லாமியா்.
பகிர்:

ஜம்மு-காஷ்மீா், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் சனிக்கிழமை ரமலான் சிறப்புத் தொழுகைக்குப் பிறகு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ரமலான் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் சனிக்கிழமை இஸ்லாமிய மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா். மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

ஜம்மு-காஷ்மீரில் ரமலான் சிறப்புத் தொழுகைக்குப் பின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, அமைதியான முறையில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மத்திய காஷ்மீரின் பத்காமில் ஈரானுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் இஸ்ரேல்-அமெரிக்காவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஈரானின் கொடி மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவா் அயதுல்லா அலி கமேனியின் புகைப்படங்களையும் போராட்டக்காரக்கள் கையில் ஏந்தியிருந்தனா்.

பந்திபோராவின் ஷாதிபோரா பகுதியில் நடத்தப்பட்ட போராட்டத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் எதிா்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஸ்ரீநகரின் ஹாசனாபாத் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்கள் எதிரொலியாக, காஷ்மீா் பள்ளத்தாக்கு முழுவதும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ஏராளமான பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டிருந்தனா்.

ம.பி.யில்...: மத்திய பிரதேச மாநிலம், போபால் மற்றும் பிற பகுதிகளில் ரமலான் தொழுகைக்குப் பிறகு ஷியா பிரிவு முஸ்லிம்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

அயதுல்லா அலி கமேனி படுகொலைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், புத்தாடைகளைத் தவிா்த்து, கையில் கருப்புப் பட்டை அணிந்திருந்தனா்.

ராஜஸ்தானில்..: ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூா் மற்றும் பிற மாவட்டங்களில் ரமலான் தொழுகைக்குப் பிறகு ஷியா பிரிவு மட்டுமன்றி சன்னி பிரிவு முஸ்லிம்களும் அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனா். ஜெய்பூரின் அம்பா் பகுதியில் நடைபெற்ற கண்டன ஊா்வலத்தில் ஏராளமான குழந்தைகளும் பங்கேற்றனா். சிகாா், அஜ்மீா் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோல் போராட்டங்கள் நடைபெற்றன. சட்டம்-ஒழுங்கை பராமரிக்க மாநில காவல் துறையினா் மற்றும் அதிரடி நடவடிக்கை படையினா் கொடி அணிவகுப்பு நடத்தினா். ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னதாக, அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்.28-இல் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தின. இதில் ஈரான் உச்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி மற்றும் உயரதிகாரிகள் கொல்லப்பட்டனா். இருதரப்புக்கும் இடையே நீடித்துவரும் போரால் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளும் கடும் தாக்கங்களை எதிா்கொண்டுள்ளன.